மாதிரி புகைப்படம்

குருகிராம்

டந்த 20ஆம்தேதி குருகிராமில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்த முடியாமல் தடுத்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் தேதி அன்று குர்காமில் உள்ள சரஸ்வதி கஞ்ச் என்னும் இடத்தில் உள்ள திறந்த வெளியில் 50 இஸ்லாமியர்கள் கூடி தொழுகை நடத்தி உள்ளனர்.   அப்போது அங்கு வந்த அருண், மனீஷ், தீபக், மோகித், ரவீந்தர் மற்றும் மோனு ஆகியோர் அவர்களைத் தடுத்துள்ளனர்.   இந்த விவகாரம் விடியோ பதிவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

அந்தப் பதிவில் இந்த ஆறு இளைஞர்கள், “மசூதியில் போய் தொழுகை செய்யுங்கள்,  மசூதி எதற்கு கட்டப்பட்டுள்ளது?  உங்கள் ஊருக்கு போய் உங்கள் பிரார்த்தனைகளை எங்கு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள்” என கூச்சலிடுவது தெரிய வந்தது.   இந்நிலையில் அந்த ஆறு பேரும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும்  இஸ்லாமியர்களை தொழுகை செய்ய விடாமல் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பியதாகவும் வதந்திகள் கிளம்பின.

காவல்துறையினர் அந்த வதந்திகளை மறுத்துள்ளனர்.   அருண் உட்பட ஆறுபேரையும் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.    இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த கிராம தலைவர், “இந்த 6 இளைஞர்களும் என குற்றமும் செய்யவில்லை.   தொழுகைக்கு என அமைக்கப்பட்ட இடத்தில் சென்று தொழுகை நடக்குமாறு கூறி உள்ளனர்.

தற்போது இந்த கிராமத்தில் வெளியூர் இஸ்லாமியர்கள் அதிகரித்து வருகின்றனர்.   அவர்கள் ஒவ்வொரு வெள்ளி அன்றும் நடைபாதைகளிலும் நடுச்சாலைகலிலும் தொழுகை புரிந்து மக்களுக்கு தொல்லை தருகின்றனர்.    மாவட்ட நிர்வாகம் இது போல எந்த இடத்திலும் தொழுகை செய்ய அனுமதிக்குமா?”  என கேட்டுள்ளார்.