அத்தியாயம்.7: – டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி.,

ந்தவாரம் தேமல் குறித்து பார்ப்போம்.  தேமல் சின்ன சின்ன வட்டமாக மெல்லிய துகள்களுடன் அசடு  வழியும் பகுதியான முகம் கழுத்து, மார்பு, மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்படும்.  இது வெண் தேமலா கவோ கறுந்தேமலாகவோ இருக்கலாம். இதனால் அறிப்பு ஏதும் ஏற்படாது. நிற மாற்றம் இருப்பதால், அச்சப்பட்டு மருத்துவரை அணுகுவார்கள்.

தேமல்  மலசேச்யா (malasseio) என்ற ஒரு வகை பூஞ்சை கிருமியால் ஏற்படுகிறது. இந்த கிருமியின் ஸ்போர் ( பூஞ்சையின் விதை)  அனைவரின் உடலிலும் இருக்கும். வியர்வை  உடலில் அதிக நேரம் தங்கும் போது ஸ்போர்,  இழைபோல் உருமாறும் இதை மைசீலியம் (mycelium)  என்று மருத்துவர்கள் அழைப்போம்.

தேமல், சிறு வயதினருக்கு வர வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக தேமல் ஈரப்பதமும், சூடும் அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம்.  எனவே   தமிழகத்தல் வருவருவதற்கான  வாய்ப்புகள் அதிகம்.

வியர்வை நீண்டநேரம் உடலில் தங்கும் போது  தேமல் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும்  வரலாம். அதற்காக  தேமல் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி  குறைவாக உள்ளது என்று  அர்த்தம் அல்ல.

தேமலை வெண்புள்ளி வியாதியோடோ, அல்லது தொழுநோயோடோ  (leprosy) சேர்த்து நினைப்பவர்கள் உண்டு. ஆனால் அது தவறு.

தேமல் குறித்து கண்டறிய, சில சமயம் தோலை மேலாக –   காயம்படாமல் – சுரண்டி நுண்நோக்கியால் காணவேண்டியது வரலாம்.

நுண்நோக்கியில் காணும்போது இந்த கிருமியானது, சேமியாவும் ( மைசீலியம்) ஜவ்வரிசியும் (ஸ்போர்)  கலந்த  பாயாசம் போல் காணப்படும்.

தேமலை, மேல்தடவும் மருந்து மூலம் குணப்படுத்தலாம். தேமல் உள்ள  இடங்களிலும்,  தேமல் வர வாய்ப்பு உள்ள  இடங்களிலும், தொடர்ந்து 3 வாரம்  தடவும் போது தேமல் நீங்கும். மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள்  குறையும். சில சமயம் வாய்வழியாக மருந்தும் தேவைப்படும்.

பொதுவாகவே, இறுக்கமான  ஆடைகளைக் தவிர்ப்பதன் மூலமும்,  வியர்வை வந்தால்  அடிக்கடி குளிப்பதன் மூலமும் தேமல் வரவிடாமல் தடுக்கலாம். இதில் முக்கியமான விசயம், குளித்தபிறகு உடலை நன்றாக உலர்த்த வேண்டும்.

(அடுத்த வாரம் சந்திப்போம்)