திருச்சி: தமிழகத்தில் 2021 ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  கூறினார்.

திருச்சியில்  நடைபெற்ற நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில்கலந்துகொண்டு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 496 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,  வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்கு பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று கூறியவர்,  கரும்பலகைகள் இல்லாமல் செய்திட 80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் பலகைகள் ஏற்படுத்தப்படும். 7,442 பள்ளிகளில் விஞ்ஞானிகள் துணையுடன் பயிற்சி பெறும் வகையில் நவீன ஆய்வுக் கூடம் ஏற்படுத்தப்படும். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும் என்றார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,  பள்ளிகள் திறப்பதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். மருத்துவக் குழுவினர், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை கேட்டு தேவைப்படும் நேரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றார்.