சென்னை: காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும்,  பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவின் 2வது அலை என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் நேற்று  மட்டும் புதியதாக  6,711 பேருக்குத் தொற்று  உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 2,105 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

தொற்று பரவலை தடுக்கும் வகையில், காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை  தேனாம்பேட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

“கொரோனா தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. ஆனால், இப்போது அவர்களுக்கு கொரோனா குறித்து தெரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் சோர்வடைந்திருக்கின்றனர். சென்னையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன”.

தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கள்ள பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது.  பொதுமக்கள் அனைவரும் கைகளில் முகக்கவசம் வைத்துள்ளனர். ஆனால், அதனை அணியமாட்டார்கள். நாம் எச்சரித்தால்தான் போடுகின்றனர்.

தமிழக காவல்துறை தரப்பில் இதுவரை சுமார் 3,300 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இதுவரை,  7,000 பேர்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று மட்டும் 700 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.