சென்னை:

சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிதீவிரமடைந்து உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொற்று பரவல் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதுபோல பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று  ஒரே நாளில் சென்னையில்  மட்டும் புதிதாக 1322 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில்,  16,699 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,098 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும், இதுவரை 529 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் கர்ப்பிணி பெண்கள் 523  பேரும் அடங்குவர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இவர்களில் 439 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும், மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறையினர்,  பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுகிறதா என மருத்துவர்கள்  தொடர் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்து உள்ளனர்.