லண்டன்: வரும் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே, கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம்.

ஹார்வர்டு பல்கலை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வாக உள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு சிறிய அளவில் தலைகாட்டிய ‘சார்ஸ்’ வைரஸ், இடைவெளிக்குப் பின் மிகவும் பெரிதாக வெடித்தது. அதேபோல், கொரோனா வைரசும் வெடிப்பதற்கு முன் அதை அழிக்கத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியம்.

இல்லையெனில், பிறவகை கொரோனா வைரஸைப் போல, ஒவ்வொரு குளிர்காலத்திலும் இது மீண்டும் தலைகாட்ட வாய்ப்புகள் உள்ளன.

சீனா வைரஸ் தாக்கத்திலிருந்து சற்று மீண்டு, ஊரடங்கைத் தளர்த்தியதும், அங்கு மீண்டும் இரண்டாவது அலை வீசத்துவங்கியதே இதற்கு உதாரணமாய் உள்ளது.

இதனால் வரும் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே இந்த வைரஸிலிருந்து மனித குலத்தைக் காக்க முடியும். குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளிலும், மக்கள்தொகை அதிகமுள்ள சீனா, இந்தியாவிலும் கட்டாயம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.