சென்னை:

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரவுவது தொடர்பான வழக்கில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் பதிலால் கோபமடைந்த நீதிபதிகள்,  அதை ஏற்க முடியாத என்று கண்டனம் தெரிவித்தனர்.

சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழகஅரசு உள்பட சில மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக முகநூல் போன்ற நிறுவனங்களில் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

இந்த நிலையில், தனிநபர் உரிமையான ஆதார் எண்ணை பதிந்தால், அது மேலும் தவறான பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு தரப்பினரும், தவறான தகவல்கள் பரப்புவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பேஸ்புக், வாட்ஸப் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும், ஆனால் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, வாட்ஸ்அப் நிறுவனத்தின் பதிலை கேட்டு அதிர்ந்த நீதிபதிகள், மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்து விட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸப் நிறுவனம் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என கண்டனம்  தெரிவித்தனர்.

மேலும், வாட்ஸப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக வலைதளங்கில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

காட்சி ஊடகங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அமைப்பு இருப்பதை போல, சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து ஆஜரான மத்திய அரசு  வழக்கறிஞர், சமூக வலைதளங்களை கண்காணிக்க வும், தவறான தகவல்களை கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து தமிழகஅரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மாநில அரசின் நடவடிக்கை களுக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்குவதை போல வாட்சப் நிறுவனம் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியது.

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.