சென்னை:

த்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசிய சாலமன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர், டில்லி ஜே.என்.யூ. பல்கலையில் படித்துவந்தார். அவர் சமீபத்தில் அங்கு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடல் சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.

அப்போது திருவள்ளூரை சேர்ந்த இந்திய மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் சாலமன் தன் கால்களில் இருந்த செருப்பை கழற்றி அமைச்சர் மீது வீசினார். இதையடுத்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சாலமனின் அண்ணன் சந்தோஷ், “ஆர்.கே. நகர் தொகுதியில் சாலமன் போட்டியிட இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “‘மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அடிப்பது எங்கள் நோக்கம் கிடையாது. பாஜக, , இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து தலித்துகள் மீது வன்கொடுமை செய்து வருகிறது. தலித்துகள் அநாதைகளாகப்பட்டு.. கைவிடப்பட்டு இருக்கிறார்கள்.

சங்கர், இளவரசன், கோகுல்ராஜ், ரோகித், முத்துகிருஷ்ணன் என  தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

முத்துகிருஷ்ணனை பாஜகவே கொலை செய்து விட்டு அதே  கட்சியை சேர்ந்த பொன்ராதாகிருஷ்ணனை அனுதாபம் தெரிவிக்க அனுப்புகிறது. இது மக்களை முட்டாளாக்கும் செயல். ஆகவேதான் சாலமன் அப்படிச்செய்தார்” என்றார்.

மேலும், “ இந்திய மக்கள் முன்னணி இயக்கத்தின் சார்பாக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில்  சாலமன் போட்டியிட இருக்கிறார். தண்டனை கைதிகள் தான் தேர்தலில் போட்டியிட முடியாது. சாலமன்  விசாரணை கைதிதான்.

விரைவில் ச சாலமன் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யவோம்” என்று அவர் தெரிவித்தார்.