புதுடெல்லி: நாட்டில் ஒருபக்கம் ஊரடங்கு பொருளாதார முடக்கம் இருந்தாலும், சில நிறுவனங்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை அளித்துவரும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து வருகிறது.
கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, நாட்டில் அதிக வேலையிழப்புகள், ஊதியப் பிடித்தங்கள் உள்ளிட்ட பல விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சில நிறுவனங்கள் தொடர்பாக, வேறுசில ஆச்சர்யங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கேப்ஜெமினி, ஃபியூச்சர் ஜெனராலி இந்தியா இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரெனீ பவர், ரெனால்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சம்பள உயர்வையும் பதவி உயர்வையும் அறிவித்துள்ளன. ஊழியர்களின் மன உற்சாகம் மற்றும் மனவலிமையை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கிய‍ைப் பொறுத்தவரை, அதன் அனைத்துக் கிளைகளிலுமுள்ள 80000 ஊழியர்களுக்கு 8% வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளும், களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.