சென்னை:

தாயைப் பிரிந்து சென்ற மகன் கொரோனாத் தொற்று ஏற்படுத்திய நெருக்கடியால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சத்துணவு அமைப்பாளர் வரலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஐந்து மகன்கள் உள்ளனர். இவர் கணவனை இழந்தவர்.

மூன்றாம் மகனான பாண்டியராஜன் சினிமா ஆசையோடு 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். சென்னையில் சினிமா வாய்ப்பு எதுவும்  கிடைக்காததால் செங்குன்றத்தில் பேப்பர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கொரோனாவால் முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாண்டியராஜன் வேலை ஏதும் இல்லாமல் ஒருவேளை உணவிற்கே திண்டாடினார். எனவே  தாயிடமே மீண்டும் வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் நடந்தும், பின்பு லாரிகளிலும் பயணம் செய்து வந்ததாக பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் தாய் வரலட்சுமி வியப்பிலும், மகிழ்ச்சியிலும்  மூழ்கினார். தாயைக் கண்ட மகன் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார்.

தொலைந்து போன மகன், தாயிடம் மீண்டும் வர கொரோனாத் தொற்று காரணமானது வியப்புதான்.