டெல்லி: காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிப்பதா என்று ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளது.

அண்மையில் முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. போட்டியிட்டவர்களில் 63 பேர் டெபாசிட் இழந்தனர். இது கட்சியின் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தலைவர் இல்லாததால் தான் இந்த நிலைமை என்று பேசப்படுகிறது.

இந் நிலையில், கட்சியின் மாநாடு ஏப்ரல் 2வது வாரத்தில் நடக்க உள்ளது. அதில் கட்சிக்கு யார் தலைவர் என்பது இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. சோனியா காந்தியே வழி நடத்திச் செல்வாரா இல்லை, ராகுலிடமே அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுமா என்று தெரியவில்லை.

தற்போது சோனியா காந்தியின் உடல்நிலை முன்பு போல் இல்லை. டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. டெல்லி மாநில காங்கிரசின் செயல்பாடுகள் திருப்தியில்லை என்று புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, காங்கிரஸ் மாநாட்டில் கட்சிக்கான தலைவர் அறிவிக்கப்பட உள்ளார் என்று தெரிகிறது. வலிமையான தலைமையே கட்சியின் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்பதை உணர வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.