புதுடெல்லி: கடந்த 1948ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையில் இருக்கும் ஒரு விஷயம்(காஷ்மீர்) எப்படி உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்க முடியும்? என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசியது, அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், மற்றொரு காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, கட்சியின் நிலைப்பாட்டை மக்களவையில் தெளிவாக எடுத்துரைத்ததாய் காங்கிரஸ் தலைவர் திருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “கடந்த 1948ம் ஆண்டு முதல் காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. அவையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்பிரச்சினை வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினை என்றால், எதற்காக பல நாடுகளிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்?” என்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதுகுறித்து அதிருப்தி அடைந்ததாய் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மற்றொரு தலைவர் மணீஷ் திவாரி கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியதாயும் கூறப்படுகிறது.

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு சசிதரூர் மற்றும் மணீஷ் திவாரி போன்ற பிரபலங்கள் இருந்தாலும், அதிகம் அறியப்படாத ஆதிர் ரஞ்சன் செளத்ரியை, காங்கிரஸ் மக்களவை தலைவராக்கியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது.