டில்லி,

மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் அவசியம் என வலியுறுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து வங்கி பரிவர்த்தனை முதல் அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும், நிலம் பதிவு விற்பது, வாங்குவது மற்றும் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பு, பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு என அனைத்துவகையான திட்டங்களுக்கும் ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது, வாகன ஓட்டிகள் தங்கள்  டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

சமீபத்தில் அரியாவில் நடைபெற்ற டிஜிட்டல் அரியானா என்ற மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த தகவலை தெரிவித்தார். இதுகுறித்து, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருடன் விவாதித்துள்ளதாகவும், இதன் மூலம்  டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், ஒருவரின்  அங்க அடையாளத்தையும் ஒப்பிட முடியும் என்றும் கூறினார்.

ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின்  அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.