சென்னை:
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும்.

கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் என்றும், எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 1000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை என்றும், தினமும் விவசாயிகள் அனுபவிக்கும் தீராத இன்னல்களை, வினோத விவசாயியின் அ.தி.மு.க. அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லைச் சேமித்து வைத்து விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பும் இல்லை; வசதிகளும் இல்லை. ஆகவே அறுவடை செய்தவுடன் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்றால்தான் அவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாவது தப்பிக்கும் என்ற சூழலில், அதிக எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது அ.தி.மு.க. ஆட்சியின் விவசாயிகள் விரோத போக்கிற் கான அடையாளமாகும்.

இன்று (நேற்று) “தினத்தந்தி” பத்திரிகையின் தலையங்கத்தில் “நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதல் விலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இந்த ஆண்டு “பெயரளவுக்கு” ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து விவசாயிகளை மேலும் கவலைக் கிணற்றில் தள்ளி விட்டுள்ளன.

சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1958 ரூபாய், சாதாரண ரக நெல்லுக்கு 1918 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஆதாரவிலை நிச்சயம் போதாது. இது விவசாயிகளின் வாழ்வில் நிம்மதியைத் தராது. கட்டுபடியாகாத இந்த விலை நிர்ணயத்தால், விவசாயிகள் அனைவருமே தங்களின் வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை தொலைக்கும் இக்கட்டான சூழலுக்கு உள்ளாகியுள்ளனர். விவசாயிகள் விரோத மனப்பான்மையை முதலில் அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

ஆகவே, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகளும், விவசாயமும்தான் தமிழகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியத்தூண்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,000 ரூபாய் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும்; நெல் விலையில் எந்தவித கழிவும் செய்திட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.