சென்னை: ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் நல சங்கம் ரயில்வேக்கு புகார் தெரிவித்தது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்களை ஆங்கிலம், உள்ளூர் மொழிகளில் வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் ஒன்றை எழுதினார்.
இந் நிலையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் வரும் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
எனவே ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்றும், முன்பதிவின் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.