திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. இன்று காலை முதலே திருவனந்தபுரம் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும். குஜராத் மாநிலம் சூரத்துக்கு தென்மேற்கே 920 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் இந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன்பின்னர் 24 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் வலுப்பெறும்.

வரும் ஜூன் 3ம்தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். வடக்கு மகாராஷ்டிரா கோவா மற்றும் தெற்கு குஜராத்தின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்னாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு   மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாக இருக்கும் /

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம். திருவட்டார், திற்பரப்பு, பேச்சிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

கேரளாவில் மழை தொடங்கியதைத் தொடர்ந்து  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேசிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி போன்ற அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.