சென்னை: எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை, அது வதந்தி என்று எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இன்று காலை சமூக வலைதளங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, எடுக்கப்பட்ட  கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியானது. இது திரையுலகினர் உள்பட அனைத்து தரப்பினரிடமும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், அந்த தகவல் முற்றிலும் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது  தந்தையின் உடல்நிலை குறித்து எனக்கே முதலில் தகவல் கிடைக்கும். பிறகு தான் மீடியாவுக்கு தரப்படும். அவருக்கு COVID Positive/Negative என்பதை எல்லாம் தாண்டி, இன்னமும் தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக உள்ளது.

இதுபோன்ற வசதிகளை யாரும் பரப்ப வேண்டாம், அதை யாரும் நம்ப வேண்டாம் என உருக்கமாக தெரிவித்து உள்ளார்.