சென்னை: எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் தனியார்  மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அங்கு எஸ்பிபிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகமும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில், தந்தையின் உடல்நிலை குறித்து வரும் திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்து உள்ளார். தந்தையின் உடல்நிலை 4வது நாளாக சீராக உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.

இது குறித்து மருத்துமனை நிர்வாகம் கூறி இருப்பதாவது: கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம், எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.

அவர் தற்போது சீரான நிலையில் உள்ளார். விழிப்புடன், சொல்வதை புரிந்து பதில் கூறும் வகையில், மருத்துவ ரீதியிலான முன்னேற்றத்தை காட்டி வருகிறார். எங்களது மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.