புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்..

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

ராஜேஷ் கன்னாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழுமலை வெங்கடேசனின் சிறப்புப் பதிவு

அமர்பிரேம் படத்தில் இந்த வசனத்தை ஆனந்த்பாபு பாத்திரத்தில் வரும் ராஜேஷ்கன்னா ஷர்மிளாவிடம் சொல்லுவார். அவர் இளமையாய் இருக்கும் போதும் சொல்லுவார். நான் நேசித்த ஷர்மிளா வயதாகிப் பிரியும்போது இந்த வசனத்தைச் சொல்லுவார்..

ஆராதனா படத்தைப் பார்த்து ராஜேஷின் உலகத்தில் நுழைபவர்கள் அமர் பிரேம் படத்தில் மிரண்டுபோய்விடுவார்கள். மனுஷன் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். ஆராதனா படப்பாடல்களெல்லாம் நாடு முழுவதும் ஒலித்த துள்ளல்கள் என்றால், அமர்பிரேம் படமும் சரி, அதன் அத்தனை பாடல்களும் சரி, எல்லா பக்கங்களிலும் கச்சிதமாக வடிக்கப்பட்ட அழகோவியம்.. நெஞ்சைவிட்டு அகலவே அகலாது..

ராஜேஷ்கன்னாவுக்கும் மற்ற முன்னணி நடிகர்களுக்கும் இருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதிலும் ராஜேஷ் கன்னாவிற்குக் கிடைத்த அளவுக்கு இன்றளவும் இந்தி திரைத்துறையில் வேறு யாருக்காவது பெண் ரசிகைகள் கிடைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில்.

மாப்பிள்ளைன்னா இவரை மாதிரிதான் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய அளவுக்கு வெறித்தனமான பெண் ரசிகைகளைக் கொண்டவர்..

ராஜேஷ்கன்னா போட்டோவை  வைத்து மாலைமாற்றி அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டதாகச் சொல்லி ரத்தத்திலேயே லவ் லெட்டர் எழுதி அனுப்பிய ரசிகைகள் ஏராளம்.. ராஜேசின் கார் சிக்கினால்கூட கிஸ்அடித்தே காரை லிப்ஸ்ட்டிக்கால் ஒத்தி எடுத்துவிடுவார்கள் அவருடைய ரசிகைகள்

ராஜேஷ் கன்னா.. 1970களின் துவக்கத்தில் இளம்பெண்கள் ஓயாமல் உச்சரித்த அது ஒரு மந்திரப்பெயர்.

இருபதாண்டுக்காலம் ராஜ் கபூர், தேவ்ஆனந்த், திலீப்குமார் என மூவேந்தர் கள்  இந்தி திரையுலகை ஆட்டுவித்து வந்தனர். மூவரில் யார் சூப்பர் ஸ்டார் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அந்த அளவுக்குச் சரிக்குச் சமமாகக் கொடி கட்டி பறந்தார்கள். அப்படிப்பட்ட  இந்தி திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பெற்றது ராஜேஷ் கன்னாதான்.

உபயம், 1969ல் வெளியான ஆராதனா படம்.. அதற்கு முன் ராஜேஷ்கன்னா, சில படங்கள் நடித்திருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் எதுவும் கிடையாது.

முதல் படம் ஆக்ரி காட் (தமிழில் சிவக்குமார் நடித்து பூந்தளிர் என ரீமேக் செய்யப்பட்டது.. வா..பொன் மயிலே உந்தன் ஏக்கத்தில் தவிக்குதே என்ற பாடல் மெகா ஹிட்)..

அதற்குப்பிறகு தமிழில் வெளியான சித்தி படத்தின் ரீமேக்கில் ராஜேஷ்கன்னா நடித்தார். பத்மினிக்குத் தம்பியாக முத்துராமன் நடித்த பாத்திரம்..இப்படிப் பட்ட நிலையில்தான் ஆராதனாவில் வாய்ப்பு கிடைத்து ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆனார் ராஜேஷ்கன்னா

ஆராதனாவில் வரும் மேரி சப்னோகி ராணி கபு பாட லை ஷுட் செய்ய இயக்குநர் சக்தி சமந்தா தயா ராக இருந்தபோது கதாநாயகி மெகா ஸ்டாரான ஷர்மிளா தாகூரின் தேதி கிடைக்காமல் தவித்துவந்தார்.

லீடிங் நாயகனாக இல்லாதவர் என்பதால், ராஜேஷ் தினமும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து காத்திருந்து விட்டு சும்மா போவார். கடைசியில் ராஜேஷ் சம்மந்தப்பட்ட ஜீப் பயண மலைப்பாதை காட்சிகளை இயக்குநர் தனியாகப் படமாக்கிவிட்டார்.

அதன்பிறகு ஷர்மிளா காட்சிகளைமெகபூப் ஸ்டூடி யோவில் பிடித்து காட்சியைத் தேற்றிவிட்டார். மலை ரயிலில் ஷர்மிளா குலுங்கிச் குலுங்கி சிரிக்கும் அத்தனை காட்சிகளும் ஸ்டுடியோவே

இந்த பாடல் மட்டுமின்றி ஒரே ஷாட்டில் படம் பிடிக்கப்பட்ட ரூப்பு தேரா மஸ்தானா பாடல் உள்பட படத்தின் அத்தனை பாடல்களும் ஒட்டுமொத்த இந்தியாவைப் பைத்தியம் பிடிக்கவைத்துவிட்டன.

கோரா கா கஸ்.. பாடல் ரொமான்ட்டிக்கின் உச்சம். அந்த குளோஷப் ஷாட்கள்.. அதிலும் பாடலின் ஆரம்ப ஹம்மிங்… உண்மையிலேயே தேசம் முழுவதும் ஒலித்த, சினிமா தேசிய கீதம்..இந்தியே தெரியாத தமிழ்நாட்டில், கிராமங்களில்கூட ஆராதனா டீ ஸ்டால், ஆராதனா முடிதிருத்தகம் என சகட்டுமேனிக்கு முளைத்தன.

இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட ராஜேஷ் கன்னா ஆராதனாவிலிருந்து தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் 15 படங்களை ஹிட் கொடுத்தார். அந்த ரெக்கார்ட் இன்றுவரை எந்த ஸ்டாராலும் முறியடிக்கப்படவில்லை.

ஆச்சரியம் என்னவென்றால் எந்த ராஜேஷ்கன் னாவை ஷர்மிளா தாகூர் காக்கவைத்தாரே அதே ராஜேஷ் பின்னால் பின்னாளில் வெற்றிக்காக அம்மணி தொடர்ந்து ஓட வேண்டியிருந்ததுதான்

ராஜேஷ் கன்னாவின், அமர் பிரேம் படப்பாடல் சூட்டிங்கைக்காண கொல்கத்தா ஹௌரா பிரிட்ஜ் மேல் கட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்களால் பாலத்துக்கே வம்பு என்கிற நிலை வந்து, வேறு வழியில்லாமல் அதே பாடலை ஸ்டுடியோவுக்குள் படமாக்கிய வரலாறெல்லாம் வியப்பானவை..

ஹாத்தி மேரே சாத்தி, கதி பதங். மேரே ஜீவன் சாத்தி,சச்சா ஜுட்டா, ஆப் கி கஸம், அப்னா தேஷ், பிரேம் நகர் என எழுபதுகளின் மத்தி வரை அவரது படங்களின் பிளாக் பஸ்டர் ஆதிக்கம்தான்.

ராஜேஷ்கன்னா டாப்பில் இருந்தபோது, பாம்பே பல்கலைக்கழகம் அவரின் செல்வாக்கு பற்றி. பாடப் புத்தகத்தில் ஒரு கட்டுரையை வைத்திருந்தது.. அந்த கால கட்டத்தில்தான் குழந்தைகளுக்கு ராஜேஷ் என்கிற பெயரைச் சூட்டும் படலமும் அதிகரித்தது…

ஸ்டைல் ப்ளஸ் கிஷோர் குமாரின் வாய்ஸ் இரண்டும் அசாத்தியமான பலம் ராஜேசுக்கு.. கிஷோரின் பாடல்கள்தான் ராஜேஷ்கன்னாவுக்கு சிம்மாசனம் போட்டவை..அதே பாடல்கள்தான் இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட வாழ்வில் பாபி என்ற ஒரே படத்தின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிம்பிள் கபாடியாவை மணந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்

ஆனால் அதற்கு முன் நடிகை அஞ்சு மகேந்திரா வுடனும், டிம்பிளை மணந்த பின் டீனா முனீமுடனும் பல ஆண்டுகள் காதல் வாழ்வை நடத்தி வந்ததும் பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கலாம்.

ராஜேசுடன் மணமாகாமல் குடும்பம் நடத்திவந்த டீனா முனீம்தான் இப்போது அனில அம்பானிக்கு மனைவியாக இருப்பவர்.

அமிதாப்பச்சன் ஷோலோவில் தலைதூக்கும்வரை அண்ணன் ராஜேஷ் கன்னாவின் ஆட்டம்தான் இந்தியாவை அதிரவைத்தது..

 

அரசியலிலும் நுழைந்து பார்த்தவர் ராஜேஷ்கன்னா, காங்கிரசில் சேர்ந்து மக்களவை தேர்தலிலும் நின்று பெற்றார். ஆனால் அரசியல் அலர்ஜியை தந்ததால் அதை சீக்கிரமே துறந்தார்.

ராஜேஷ்கன்னா- டிம்பிள் கபாடியா தம்பதியரின் மகள் நடிகை டிவிங்கிள் கன்னாவைத்தான் இன்றைய முன்னணி நடிகர் அக்ஷய்குமார் மணந்துள்ளார்

காக்காஜி எனச் செல்லமாக அழைக்கப்படும் மறைந்த ராஜேஷ்கன்னாவின் 77 வது பிறந்தநாள் இன்று.