சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக பாதிக்கப்படும் தமிழக பொருளாதாரத்தை எதிர்கொள்ள ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு  நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களை தொடர்ந்து கண்காணித்தல், அவர்களை பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல்,சிசிச்சை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அது சமூகத்தொற்றாக மாறிவிடாதபடி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் சாதாரண அடிதட்டு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தேவையானவை தொடர்ந்து விநியோகிக்கபட்டுவருகிறது.இதுபோன்ற நிலையில் நிவாரண உதவிகளை அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். வட்டிவிகிதம் குறைப்பு உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், இந்திய பொருளாதாரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்தும் அதே நேரத்தில் ஏழை, எளியவர்களுக்கான நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் அவசியமாகிறது. இதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் நிவாரண உதவிகள் அடுத்து வருகின்ற நாட்களில் தேவைப்படுகிறது.மருந்து உபகரணங்கள்,உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய அதிக நிதி தேவைப்படும் நிலை ஏற்படும்.பல பிரிவு மக்களின் தொழில் வளர்ச்சியை மீண்டும் எட்ட அவர்களுக்கு உதவி செய்வதோடு,அவர்களின் பொருளாதார மேம்பாட்டை புதுபிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.இதன் மூலம் எல்லா அரசுக்கும் வரி குறைப்பு,வருவாய் இழப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

சில காலங்களுக்கு வருவாயை உயர்த்திக் கொள்ளும் முடியாது.இந்த நிலையில்
2019-20 மற்றும் 2020-21-ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி.பி.யில் சில விதிவிலக்கை கேட்டு கடந்த 25-ந் தேதி கடிதம் எழுதி இருந்தேன். அது, மாநிலத்தின் கூடுதல் செலவை எதிர்கொள்ள உதவும்.
தற்போது உள்ள இந்திய நிதி பரிவர்த்தனை முறைகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு மட்டுமே கடன் பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரத்தில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்கம் இருக்கும்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்காக வழக்கத்தில் இல்லாத முறையை பின்பற்ற வேண்டியதுள்ளது. வழக்கமாக உள்ள பொருளாதார கொள்கை, கோட்பாடுகளையெல்லாம் தற்காலிகமாக ஓரம் ஒதுக்கிவிட்டு மாற்று ஏற்பாட்டை கைக்கொள்ளலாம்.

ரூ 9 ஆயிரம் கோடி

எனவே இந்த சூழ்நிலையில் மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெறுவதை அனுமதிப்பதோடு, மாநில அரசுகளுக்கு சிறப்பு மானியமாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மாநில அரசு அளித்துள்ள பங்களிப்புக்கு ஏற்ற விகிதத்தில் மாநில அரசுகளுக்கு நிதிப் பகிர்வை வழங்கலாம். அந்த வகையில் தமிழகத்துக்கு சிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், தேச நலனுக்காக தைரியமான, கடினமான, வழக்கத்துக்கு மாறான முடிவுகளை எடுப்பதோடு, எங்களின்  கோரிக்கையை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.