டில்லி:

ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

முன்னதாக ‘ காந்தி, அம்பேத்கருக்கு மரியாதை செய்த நாயுடு, ‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரிலான உண்ணாவிரத போராட்டத்தை  தொடங்கினார். அவருடன் ஆந்திராவை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

காந்தி சமாதியில் அஞ்சலி

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  கடந்த தேர்தலில்போது, பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி, பாஜக க கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு, மோடி அரசுக்கு எதிராக சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் கடைசி கட்டமாக தலைநகர் டில்லியில் அவர் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி, டில்லியில் உள்ள  ஆந்திர பவனில் தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

மத்திய அரசின் பாரா முகத்தை கண்டிக்கும் வகையில் கருப்பு வண்ண சட்டை அணிந்து அவர் தமது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தில் சந்திரபாபு நாயுடு

முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார்.

தர்ம போராட்ட தீக்ஷா என்ற பெயரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் தெலுங்குதேச எம்எல்ஏ, எம்பிக்களும் பங்கேற்றுள்ளன. மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டுள்ளனர்.