தானம் தந்தவன் பிளாக்மெயில் தறுதலையான கொடுமை…

சென்னையைச்சேர்ந்த 36 வயது பேங்க் மேனேஜர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து  வேறுபாட்டினால் 2017 முதல் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  2008-ல் திருமணமாகிய இவருக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை.  இதற்கிடையில் இவரது வங்கிக்கு வாடிக்கையாளராக அடிக்கடி வந்து போன ரியா நஷ்ரீன் மற்றும் நாகூர் மீரான் தம்பதியினருடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்த மேனேஜர் தனது குழந்தையின்மை பிரச்சினையைப் பற்றிச் சொல்ல, இவர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு டாக்டரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர்.  இந்த டாக்டர் விந்தணு தானம் (IVF) மூலமாக மேனேஜர் பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உதவி செய்துள்ளார்.

இந்த உதவியினால் மகிழ்ந்து போன அந்த மேனேஜர் பெண் இத்தம்பதிக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.  ஆனால் சமீபமாக மீரான் அடிக்கடி மேனேஜரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  சமீபத்தில் உடனடியாக ரூ. 25 லட்சம் தரவில்லையென்றால் குழந்தைகளைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டியுள்ளார் இந்த 45 வயது தோல் வியாபாரி மீரான்.

அதற்கு மேல் பொறுக்க முடியாத அந்த மேனேஜர் உடனே போலீசில் புகார் அளிக்க, போலீசார் மீரானின் மேல் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

– லட்சுமி பிரியா