கொழும்பு:

லங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அணியினர் பெரும்பலான இடங்களை கைப்பற்றிய நிலையில், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிவு காரணமாக உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள் தேர்வு செய்வதும்  இழுபறியாக  உள்ளது.

இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம்  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேச சபாக்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது

81  வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில்  1.6 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில்,  ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி 51 இடங்களை கைப்பற்றியது. விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களை யும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும் கைப்பற்றியது. அதிபர் சிறிசேனவின் இலங்கை மக்கள் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை பெரும் இழப்பை சந்தித்தன.

இந்நிலையில் உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் மேயர் போன்றோர் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

எதிரெதிர் துருவங்களாக தேர்தலை சந்தித்த கட்சிகள், தற்போது உள்ளாட்சி சபைகளை அமைப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்கும் சூழல் எழுந்துள்ளது.

புதிய நேரடி மற்றும் விகிதாசார கலப்பு முறை தேர்தலால் ஏற்பட்டுள்ள தொங்கு அவை நிலைமை, உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழர்  அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த நிலைமை அதிகம் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாழ்ப்பாணத்தில், தமிழர்களின் ஆதரவு பெற்ற கட்சிகளான  டக்ளஸ் தேவானந்தா கட்சியுடன்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து  ஆட்சியமைக்க நேர்ந்துள்ளது.

அதுபோல, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய நகரசபைகளில் டக்ளஸ் தேவானந்தாவின்  ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்கும் நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இரு கட்சியினரும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளாட்சி தலைவர்களை நியமனம் செய்வதில் இரு தரப்பினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து கூறிய,  வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன், சுயநலத்துக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

அதுபோல, டக்கள் கட்சியினா  ஈபிடிபி தமக்கு நேரடி ஆதரவு தரவில்லை என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறி வருகிறார்.

இந்நிலையில், நகர சபை மற்றும் ஊராட்சி சபைகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.