டெல்லி: தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை செல்ல விரும்பிய 3000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்றார்.

குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என ஆளுநர்  உரையில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.