சென்னை,

மிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தால் எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்வ தோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாகவும், அத்திட்டத்தின் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏழு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றபோது, தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் பற்றி பெயரளவுக்குக்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், இலங்கை அரசு, இலங்கையின் கடற்தொழில் சட்டத்திருத்த முன்வடிவு ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இச்சட்டத் திருத்தத்தின்படி தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் சார்பில், இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல், ஏனோ தானோ என்று பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால்,

இன்று வரையில் தமிழக மீனவர்கள் 50 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 143 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் எனவும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வர இருக்கும் அநீதியான சட்டத்தை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.