தாதுனி, மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநிலம் தாதுனியை சேர்ந்த ஒர் ரசிகர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை தனது மனைவியாக நினைத்து ஈமக்கடன்கள் செய்துள்ளார்.

சமீபத்தில் துபாயில் நடிகை ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஓட்டல் குளியல் தொட்டியில் விழுந்து முழுகி மரணம் அடைந்தார்.   அவர் மறைவு அவரது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது.   மத்தியப்பிரதேச மாநிலம் ஷியாப்பூர் பகுதியில் உள்ள தாதுனி கிராமத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் மெகரா என்பவர் புதுமையான முறையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியாப்பூர் பகுதியில் உள்ள தாதுனி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் மெகரா.   இவர் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீதேவியை தனது மனைவியாக மனதளவில் நினைத்துள்ளார்.    ஸ்ரீதேவிக்கு திருமணம் நடந்ததால் இவர் யாரையும் மணந்துக் கொள்ளாமல் தனியாகவே இருந்துள்ளார்.   இவர் ஸ்ரீதேவியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்துள்ளார்.

வட நாட்டு வழக்கப்படி ஓம்பிரகாஷ் மெகரா தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு துக்கம் காத்துள்ளார்.    நேற்று ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தி அடைய விசேஷ பூஜைகள் செய்துள்ளார்.   அந்த ஊர் வழக்கப்படி 51 கன்னிப் பெண்களை அழைத்து அங்குள்ள கோவிலில் முறைப்படி கன்யா பூஜை செய்துள்ளார்.   அத்துடன் அந்த ஊர் மக்களை அழைத்து கருமாதி சாப்பாடு போட்டுள்ளார்.    அந்த பூஜையில் கலந்துக் கொண்ட பெண்களுக்கு விருந்து அளித்து உடைகளும் வழங்கி உள்ளார்.

ஓம்பிரகாஷின் தாயார் சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்துள்ளார்.   ஆனால் அப்போது அவர் மொட்டை அடித்துக் கொள்ளவில்லை.   இது போல பூஜைகளும் செய்யவில்லை.   ஆனால் தற்போது ஸ்ரீதேவிக்காக  மொட்டை அடித்துக் கொண்டு பூஜை நடத்தி உள்ளார்.