லாகூர்

பாகிஸ்தான் நடிகையும் மாம் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவருமான சாஜல் அலி நான் எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என தனது வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சாஜல் அலி.    இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி திரைப்படமான “மாம்” இந்தித் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவர்.   நிஜ வாழ்வில் தாயை இழந்த சாஜல் அலிக்கு ஸ்ரீதேவி ஒரு தாய் போல அன்பு செலுத்தி உள்ளார்.   இதனால் ஸ்ரீதேவியுடன் அவர் மிகவும் நெருக்கமாக ஒரு மகளைப் போல் இருந்துள்ளார்.

தற்போது துபாயில் ஸ்ரீதேவி மரணம் அடைந்த செய்தி கேட்டு சாஜல் அலி மிகவும் துயர் அடைந்துள்ளார்.  தானும் ஸ்ரீதேவியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை  தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் “நான் என் தாயை மீண்டும் இழந்துள்ளேன்”  என துக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

மாம் திரைப்படத்தில் அட்னான் உடன் ஸ்ரீதேவி

அதே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அட்னான் சித்திக்கி என்னும் பாக் நடிகரும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.   “நான் துபாயில் ஸ்ரீதேவிஜியின் உறவினர் திருமணத்தில் கலந்துக் கொண்டேன்.  அந்த விழாவில் கலகலப்பாக நடனமாடி மகிழ்ந்த அழகி  நான்கே நாட்களின் மரணம் அடைவார் என யார் எதிர்ப்பார்த்திருப்பார்கள்?    நான் அவர் கணவர் பொனி கபூருக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வேன் என தெரியவில்லை.

நான் அவருடன் மாம் திரைப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு பெருமையாகும்.   அவர் இப்போது நம்முடன் இல்லை என்பத் எனக்கு பெரிதும் துக்கத்தை அளிக்கிறது.    அவருடைய பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் அவரை இழந்து தவிக்கின்றனர்.    அவருடைய இழப்பை தாங்கும் வலிமையை இறைவன் அவரது குடும்பத்துக்கு அளிக்க வேண்டும்” என இரங்கல் செய்தி அளித்துள்ளார்.

இதற்கிடையில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது தெரிந்ததே.   அவரது குடும்பத்தினர் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நோயும் இல்லை என தெரிவித்தனர்.   அவர் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அந்த அறிக்கை இன்று மதியம்  வெளி வரும் என கூறப்படுகிறது.   அந்த அறிக்கைக்குப் பின் அவர் உடல் தனி விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து வரப்படும் என தெரிய வந்துள்ளது.