இந்திய அணியை சிறப்புவாய்ந்த ஒன்றாக உருவாக்கியவர் கங்குலியே என்றும், அருமையான அணியை அவர் தோனிக்கு விட்டுச்சென்றார் என்பதான கம்பீரின் கருத்தையே வழிமொழிந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
அவர் கூறியுள்ளதாவது, “கடினமான நிலைமைகளில் சவுரவ் கங்குலி டெஸ்ட் போட்டிகளை வெல்லத் தொடங்கினார். அவரது தலைமையில்தான் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வீழ்த்த முடியும். ஆஸ்திரேலியாவை அந்நாட்டிலும், பாகிஸ்தானை பாகிஸ்தானிலும் வீழ்த்த முடியும் என்ற மன உறுதியை இந்திய அணி பெற்றது. இந்த நம்பிக்கை கங்குலி மூலம் கிடைத்தது.
கங்குலி இந்திய அணியின் மன அமைப்பையே மாற்றினார். பிறகு பிரமாதமான ஒரு வெற்றி அணியை உருவாக்கி தட்டில் வைத்து, “தோனி, இதோ ஒரு அருமையான அணியை அளித்துள்ளேன், நாங்கள் தொடங்கியதை நீங்கள் தொடர வேண்டும்” என்றார்.
தோனியைப் பொறுத்தவரை 2011 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, 2007 டி-20 உலகக்கோப்பை என்று ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் அவரின் தாக்கம் ஒரு கேப்டன் என்ற முறையில் மிகப்பெரியது. கேப்டனாக மட்டுமல்ல, வீரராக, விக்கெட் கீப்பராக பெரிய தாக்கம் செலுத்தியுள்ளார். இதனை மறந்துவிட வேண்டாம்” என்றார ஸ்ரீகாந்த்.