கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், தொடரை முழுமையாக வென்றது இலங்கை அணி.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றிருந்தது இலங்கை அணி. இதன்மூலம் தொடரையும் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இலங்கை. அந்த அணியின் குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா ஆகியோர் அரைசதமடித்தனர். மேலும், கருணரத்னே, குசால் பெரேரா மற்றும் திசாரா ஆகியோரும் கணிசமான ரன்களை அடிக்க, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களைக் குவித்தது அந்த அணி.

பின்னர், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்கம் சிறப்பாக இருந்தது. துவக்க வீரர்களில் ஷாய் ஹோப் 72 ரன்களும், அம்ப்ரீஸ் 60 ரன்களும் அடித்தனர். மூன்றாவது வீரர் பூரான் 50 ரன்களும், நான்காவது வீரர் பொல்லார்டு 49 ரன்களும் அடித்து, மிக வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலும், பின்னால் வந்தவர்கள் சோபிக்கவில்லை.

இதனால், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 301 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்களில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ். இதன்மூலம், இத்தொடரில் அந்த அணி ஒயிட்வாஷ் ஆனது.