இராமநாதபுரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டனர் என்ற காரணத்தைக்கூறி இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற பல மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் விரட்டப்பட்டனர். அப்பகுதியில், இலங்கை கடற்படையினர் அதிகம் காணப்பட்டதாக தப்பிவந்த மீனவர்கள் மிரட்சியுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை, எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி, கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளையும் கொண்டு சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் துறைமுக முகாமில் விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1974ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதலே, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீளமுடியாத துயர்தான்.

உலகளவில், மீனவர்கள் எல்லைத் தாண்டுவது ஒரு சாதாரண விஷயமே என்றாலும், இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் தொடர்வதும், அதை இந்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதும் தொடர் கதையாக உள்ளது.