டெல்லி: அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், சஜித் பிரேமதாசாவை, கோத்தபய ராஜபக்சே தோற்கடித்தார். புதிய அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய, அரசு முறைப்பயணமாக டெல்லி வந்தார். மாலை 6.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்துசேர்ந்து கோத்தபயாவை, மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களை கோத்தபய தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலில் வென்று அதிபராக பதவியேற்ற பின், கோத்தபய மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.