ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலை யில், சென்னை உயர்நீதி மன்றம், அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐஜி பொன்மாணிக்க வேல் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் புகாருக்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோயிலில்தான் பத்திரமாக உள்ளது. பாரம்பரிய கட்டடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 2017-ம் ஆண்டு யூனஸ்கோ விருது வழங்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆகம விதிகளுக்குட்பட்டுதான் அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக வும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்தும், 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.