சென்னை

ஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் இரு மாதங்களில் ஒரே மாதிரி மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.   நிகர்நிலை பல்கலைக்கழகமான இந்த கல்வி நிறுவனத்தில்  பல துறைகளைச் சேர்ந்த கல்லூரிகள் இயங்கி வருகின்றன.   இங்கு பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் வெளியூர் மாணவர்கள் என்பதால் அவர்கள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் கடந்த இரண்டு மாதங்களுக்குள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.    இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே முறையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.    சமீபத்தில் அதாவது நேற்று முன் தினம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்னும் மாணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.   இவர் நிறைய பாடங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு மே மாதம் தற்கொலை செய்துக் கொண்ட இரு மாணவர்களின் தற்கொலைக்கு பல விதமான காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.    ஆனால் தற்கொலை செய்துக் கொண்ட முறை ஒன்றாக உள்ளது.   இந்த கல்லூரி அளித்துள்ள அறிக்கையில் மாணவர்களுக்கு தேவையான தற்கொலைக்கு எதிரான ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த பகுதி காவல் அதிகாரி மாணவர்களை  பல்கலைக்கழகம் கண்காணிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

இந்த மூன்று தற்கொலைகளும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நடந்துள்ளது.   மாணவர்கள் எவ்வாறு இந்த பகுதிக்குள் வர முடிந்தது என்பது சரிவர தெரியவில்லை.  இங்கு யாரும் நுழையாத அளவுக்கு காவல் பலமாக இல்லை என இங்குள்ள ஊழியர் தெரிவித்துள்ளார்.    இதை மறுத்த ஒரு பேராசிரியர் இந்த பகுதிகள் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   ஆனால் இந்த மூன்று தற்கொலைகளும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நடந்துள்ளன.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் மன நல ஆலோசகர் ஒருவர் உள்ளதாக ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.   சென்னையைச் சேர்ந்த மன நல நிபுணர் வந்தனா, “மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் இவ்வாறு ஒரே மாதிரி தற்கொலை செய்துக் கொள்வது சகஜமாகும்.   அது மட்டுமின்றி ஒரு சந்தோஷத்துக்காக இவ்வாறு முயன்று அது மரணத்தில் முடிந்து விடுவதும் உண்டு.

இவ்வாறு தற்கொலைக்கு முயன்று தப்பித்தவர்களின் உடல் நலத்தை மட்டும் வீட்டில் உள்ளோர் கவனிக்கின்றனர்.  ஆனால் மன நலத்தை கவனிக்க வேண்டியது முக்கியமாகும்.    மீண்டும் அது போல் தற்கொலை எண்ணம் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதற்காக பல ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும்.   இதற்கு ஊடகங்களின் உதவியும் தேவைப்படும்.   திரைப்படங்களில் மதுவைக் குறித்து எச்சரிக்கை வருவது போல் தற்கொலை குறித்தும் அளிக்க வேண்டும்.  இந்த எச்சரிக்கையால் எவ்வித பயன் உண்டாகும் எனச் சொல்ல முடியாது எனினும் அது ஓரளவு பலர் மனதைக் கட்டுக்குள் கொண்டு வரும்” என தெரிவித்துள்ளார்.

மக்களில் யாருக்கேனும் இது போல் தற்கொலை எண்ணம் வந்தால் அவற்றை உடனடியாக ஆலோசகர்களிடம் தொடர்பு கொண்டு நீக்குவது மிகவும் அவசியமாகும்.

இதற்கான தொலைபேசி எண்கள் இதோ

தமிழகம் :
மாநில சுகாதாரத்துறை தற்கொலை தடுப்பு உதவி எண் : 104
ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையம் :  044-24640050

தெலுங்கானா
தெலுங்கான அரசு தற்கொலை தடுப்பு உதவி எண் : 14
ரோஷினி – 040-66202000,  66202001
சேவா – 09441778290, 040-27504682

கர்னாடகா
சகாய் : 080 65000111,  080 65000222

கேரளா
மைத்திரி – 0484 2540530
சைத்திரம் –  0484 2361161

ஆந்திரா
லைஃப் தற்கொலை தடுப்பு மையம் – 7893078930
ரோஷினி – 9166202000, 9127848584