சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் ஒரு அறிக்கை வெளியிட்டார். இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி உடைகிறது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர்  இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

சந்திப்பை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்தார் கே.எஸ்.அழகிரி. அப்போது அவர் கூறியதாவது:  திமுக.காங்கிரஸ் இடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசினோம். வரும் சட்டசபை தேர்தலிலும் அதற்கு பிறகும் இந்த கூட்டணி தொடரும் என்றார்.

அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், ‘திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: திமுக  கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா? என குள்ள நரி சக்திகள் ஏங்கித் தவிக்கின்றன. எனவே, கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை.

ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, விரும்பத் தகாத விவாதங்கள் நடத்தக்கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.