சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இதில் வரும் 28ந்தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப் பட்டுள்ளது.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என 3 வேளாண்துறை தொடர்பான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியில் இருந்து விலகினார். மேலும் வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன.

இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, விவசாய சங்கங்கள்  வரும் 25ம் தேதி பாரத் பந்த்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  விவசாயிகள் விரோத மசோதாக்கள்’ தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, , மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வரும் 28ந்தேதி தமிழகம் முழுவதும், திமுக, தோழமைக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.