சென்னை: அதிமுக அமைச்சர் டெல்லியில் கொடுத்த கடித விவரங்களை வெளியிட வேண்டும், தவறினால் நானே விரைவில் வெளியிடுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த மறுநாள் (பிப்ரவரி 10) அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தார்.

அப்போது, காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம் வழங்கியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆனால், கடிதம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சந்தேகம் எழுபப்பினார். அதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.

ஆனால், ஸ்டாலின் சங்தேகங்களுக்கான உரிய விளக்கங்களுடன் வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டார்.

இந் நிலையில் சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் உடன்படுகிறோம்.

ஆனால், மாநில அரசு நினைத்த நேரத்தில் அவ்வாறு மாற்ற முடியாது என்று தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் அறிவிப்பு வெளியான நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று, முதலமைச்சர் அளித்ததாக ஒரு கடிதத்தை வழங்கினார்.

அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லப்படவில்லை. அதை சொல்லியாக வேண்டும். அப்படி இல்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.