சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழகர்களை பாதுகாக்க வேண்டும் என கேரள முதல்வருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அடுத்த பகுதி அருகே உள்ள பெட்டிமடி எனும் தேயிலைத் தோட்டப் பகுதியில் அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்,  அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்த்து வரும்,  தொழிலாளர்கள் வசிக்கும் 30 குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. இதில் 78 பேர் மண்ணில் புதைந்த நிலையில், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும்,  மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்குள்ள தேயிலைத்தோட்ட தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்!

மீட்பு – மருத்துவ வசதிகளைச் செய்து, இழப்பீடு வழங்கி அவர்களை @CMOKerala பாதுகாக்க வேண்டும்! தமிழக அரசும் உதவ வேண்டும்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.