ப்பாவி காஷ்மீர் மக்கள் மீது தொடரும் ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இன்று கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வி.சி.கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று கூடியது. இக்கூட்டத்தில்  மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு:

  1. பிரான்ஸ் நாட்டில் 15.07.2016 அன்று நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை க்கு இந்த மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
  2. 2016 ஜூலை மாதம் இரண்டாவது வாரம் தொடங்கி காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது தொடரும் இராணுவத் தாக்குதலுக்கு இம்மாநிலச் செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நடைமுறையிலுள்ள ஆயுதப் படைகள் சிறப்பு சட்டத்தை (AFSPA) உடனே ரத்துசெய்ய வேண்டும்.
  3. மதச்சார்பின்மைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் தபால் அலுவலகங்கள் மூலம் கங்கை நீர் விற்பதைக் கண்டிப்பதோடு அதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.
  4. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமஸ்கிருதத் திணிப்புக்கும், கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகளை காவிமயப்படுத்துவதற்கும் செயற்குழு  கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. மதச்சார்பின்மைக்கு எதிரான உத்தரவுகளை ரத்துசெய்ய வேண்டும்.
  5. தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலை நிறுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவது மட்டும் போதாது; இதற்காக அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை டெல்லிக்கு அனுப்பிப் பிரதமரை வலியுறுத்தச் செய்யவேண்டும்.
  6. யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசமான வலிகாமம் வடக்குப் பகுதியில் ஆக்கிரமித்த நிலத்தைச் சுற்றி இராணுவம் வேலி எழுப்பிவருகிறது. சம்பூர் பகுதியிலும் இதே போல தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பிலேயே உள்ளன. இலங்கைப் பேரினவாத அரசின் இந்தத் தமிழர் விரோத நடவடிக்கைகளை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் தமிழர் நிலங்கள் அனைத்தையும் மீள ஒப்படைக்க வேண்டுமென்றும் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தவேண்டுமென்று மத்திய அரசை இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
  7. சென்னை உயர்நீதிமன்றப் பரிந்துரையின்படி உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் தலைவர் பொறுப்புக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரவேண்டும், முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் .

maxresdefault
 

  1. பஞ்சாயத்து எழுத்தர் பதவியை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்கு 2013ஆம் அண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 72ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. தமிழக அரசின் மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் இடஒதுக்கீட்டுக்குப் புறம்பாக செய்யப்படும் நேரடி நியமனங்களை தமிழக அரசு கைவிட வேண்டும்.
  3. ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு எனச் சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கு நிலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசை செயற்குழு வலியுறுத்துகிறது.
  4. ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதியரசர் இராமசுப்ரமணியன் வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்காக சிறப்புச் சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றவேண்டும்.
  5. தேசிய அளவில் மது ஒழிப்புக்கென பீகார் முதல்வர் திரு.நிதீஷ்குமார் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் இயக்கத்தை இம்மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடுமாறு தமிழக அரசையும், மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்குமாறு மத்திய அரசையும் இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  6. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைப் பறிக்கும்வகையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு மேலும் முனைப்போடு செயல்பட வேண்டும்.

14.. மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டுவரும் வெறுப்புப் பிரச்சாரத்தை மத்திய  பாஜக அரசு ஊக்குவித்து வருகிறது.   கட்டமைப்புரீதியான வன்முறை அதிகரிப்பதற்கு ஆதரவளித்து வருகிறது. பட்ஜெட்டில் தலித் மக்களின் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தும், SCSP/ TSP முதலான திட்டங்களை ரத்துசெய்தும் மிகப்பெரும் துரோகத்தை மத்திய அரசு இழைத்துவருகிறது; சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை முடக்க முயற்சிக்கிறது.
இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை அழிக்க முற்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்காததோடு அந்த அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆதரவளிப்பதன்மூலம் தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவானது பாஜகவின் கூட்டாளியாகச் செயல்பட்டுவருகிறது.
இது தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல  இந்துத்துவ சக்திகள் வலுப்பெற ஊக்கமளிக்கிறது.
இந்நிலையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் வழியில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கவேண்டிய வரலாற்றுக் கடமையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இம்மாநிலச் செயற்குழு உணர்கிறது. அத்தகையதொரு பரந்த அணிசேர்க்கையை உருவாக்குவதற்கான உத்திகளை வகுத்துச் செயல்படுத்திட  விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியேற்கிறது”  இவ்வாறு வி.சி.க. செயற்குழுகூட்டத்தில் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.