சென்னை:

சினிமாவுக்கு ஜிஎஸ்டி விதிப்பதால் பிராந்திய மொழிப்படங்கள் சிதையும் அபாயம் ஏற்படும் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.


வரும் ஜூலை 1ம்ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்ற புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வரவிருக்கிறது. இதில் சினிமாவுக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.யால் சினிமா தொழில் பெரிதும் பாதிக்கும்ம் என்று நடிகர் கமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மேலும், சினிமா மீதான ஜிஎஸ்டி.யை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி.யில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இது அழுத்தம் இல்லை. துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜி.எஸ்.டி.யால் பிராந்திய மொழிப் படங்கள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களை காப்பற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.