சென்னை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த  சம்பவத்தில், எங்கள் அமைப்பினர் யாரும் இல்லை என  ஃபிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

சாத்தான்குளத்தில் போலீசாரின் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் அடுத்தடுத்து இறந்த சம்பவம்  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினருடன் இணைந்து ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களும், அவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையில்,  சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இருவர் பேசும்  ஆடியோ ஒன்றும் சமூக வளைதளங் களில் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.  அதில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் அங்கு பணியாற்றவில்லை என்றும்,  காவல்துறையினர் அல்லாதவர்கள் தங்கள் உறுப்பினர்கள் அல்ல என்று விளக்கம் அளித்திருப்பதுடன், காவல்துறையினர், அவர்களுக்கு ஆதரவான உள்ளூர் தொண்டர்களை, ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணிக்கு இணைத்துள்ளனர். இதற்கும் எங்கள் அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்து உள்ளது.