டெல்லி:

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை  பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.   மேலும், பொன் மாணிக்க வேல் சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக நீடிப்பதா? ஓய்வுபெறுவதா? என்பதை அவரே முடிவு செய்யட்டும் என்றும் கூறியிருக்கிறது.

சிலைக் கடத்தல் வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில், பொன்மாணிக்க வேல் சிறப்பு அதிகாரியாக விசாரணை நடத்தி வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது.

இந்த நிலையில், தமிழகஅரசு தரப்பில், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் ஆவனங்களை  பொன்.மாணிக்கவேல்  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தது.

இந்த மனுவை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.சா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவிட வேண்டும் என முறையிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, சிலை கடத்தல் வழக்கு சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும் கூறினர்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை பொன்.மாணிக்க வேல் அவரது உயர்அதிகாரியான  ஏ.டி.ஜி.பி.யிடம்  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,  சிறப்பு அதிகாரி பதவியில் தொடர்ந்து நீடிப்பதா? ஓய்வுபெறுவதா? என்பதை பொன்.மாணிக்கவேலே முடிவு செய்யட்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.