பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான 182 மீட்டர் சிலை நிறுவும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அச்சிலைக்கான மூலப்பொருட்களும் பணியாளர்களும் சீனாவிலிருந்து வரவழைக்கப்படவிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

patel

சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மாதிரி

“மேக் இன் இந்தியா” என்று ஒருபக்கம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துகொண்டு சர்தார் வல்லபாய் படேலின் உருவச்சிலைக்கு தேவையான வெண்கலமும், அச்சிலையை நிறுவ நூற்றுக்கணக்கான பணியாளர்களும் சீனாவிலிருந்து வரவழைக்கப்படவிருப்பதை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரிய ஏக்தா சங்கத்தின் செயலர் கே.ஶ்ரீநிவாஸ், இந்த சிலை நிறுவும் திட்டத்தை அரசு எல்&டி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் எங்கிருந்து மூலப்பொருட்களை வாங்குகிறார்கள், யாரைக்கொண்டு செய்கிறார்கள் என்பதில் அரசு தலையிட முடியாது என்றும், எங்கிருந்து தரமான மூலப்பொருட்கள் மலிவாக கிடைக்குமோ அதை வாங்குவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.