சென்னை :

சிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசர்ட்டிற்கு இன்று ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. மேலும் இரண்டு கார்களில் சில டாக்டர்களும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அந்த ஊர் பரபரப்புக்குள்ளாகி உள்ளது.

கடந்த 8 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சகல வசதிகளுடன் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  அவர்களால் சிரித்து பேச முடியாது, உறவினர்களுடன் செல்பேசி மூலம் உரையாட முடியாது. அவர்களது ஒவ்வொரு அசைவும் சசிகலா தரப்பினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு தங்கியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேருக்கு கடும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு இரண்டு கார்களில் டாக்டர்கள் விரைந்துள்ளதாகவும், ஆம்புலன்சு வந்துள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள  சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அதிக அளவு மது அருந்தியதால் ஏற்பட்ட வாந்தியாக இருக்கலாம் என்று மற்றொரு தகவல் கூறுகிறது….

அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவுகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் எந்த சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்ற விவரம் தெரியாததால், சட்ட மன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் பதறியபடி உள்ளனர்.