தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இன்றைய போராட்டமும், அதில் நடைபெற்ற போலீசாரின் துப்பாக்கி சூடும் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டரில் #Sterliteprotest டிரெண்டிங் ஆகி இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வரும் நிலையில், இன்று 100வது நாள் போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, அவர்களை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளு துப்பாக்கி சூடு வரை சென்றது. இதன் காரணமாக 8 பேர் பலியாகி உள்ள நிலையில் ஸ்டெர்லைட் போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், மாநில அரசு, ஸ்டெர்லைட் பற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இன்று ஸ்டெர்லைட் போராட்டம் டிரெண்டிங்காகி முதலிடத்தில் உள்ளது