சென்னை:
பள்ளிகள் திறந்த அன்றே பாடப்புத்தங்கள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில், பள்ளிகள் திறந்து 10நாட்கள் ஆகியும் புத்தகங்கள் வழங்கப்படாத அவலம் நீடித்து வருகிறது. கல்வி அமைச்சரின் தொடர் பொய்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கடந்த 3ந்தேதி திறக்கப்பட்ட நிலையில், இன்னும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் இருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சி மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,அன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட புத்தங்களை வழங்கினார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.
அப்போது, தமிழகம் முழுவதும் சுமார் 77.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட இருப்பதாகவும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்றே வழங்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால் பள்ளிகள் திறந்த 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னமும் 3,4,5 ஆகிய வகுப்பு களுக்குப் புத்தகங்கள் தரப்படவில்லை எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு பள்ளிகள் இவ்வாறு செயல்பட்டால் நாங்கள் எப்படி அரசு பள்ளிகளில் எங்களது பிள்ளைகளை சேர்ப்பது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டால், அரசிடம் இருந்து எங்களுக்கு பாடப்புத்தங்கள் வரவில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும், ஆசிரியர்கள் பாடப்புத்தங்களின் நகலை இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கி பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து கசிந்த தகவலில், 3வது, 4வது, 5வது வகுப்புகளுக்கான பாடப்புத்தங்கள் இன்னும் அச்சடிக்கப்பட வில்லை என்று தெரிகிறது. மேற்கண்ட வகுப்புகளுக்கு தமிழக அரசு அடுத்த ஆண்டு புதிய கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்த நிலையில், திடீரென இந்த ஆண்டே புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், அதற்கான வடிவம் கடந்தமாதம்தான் இறுதி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாகவே புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி வருவதாகவும் தெரிகிறது.
ஆனால், அமைச்சர் செங்கோட்டையனோ…. அனைத்து புத்தகங்களும் ரெடியாக இருப்பதாக கூறி, தொடர்ந்து கல்வித்துறை சம்பந்தமான பொய் தகவல்லைகளே தெரிவித்து வருகிறார்…
சென்னையை பொறுத்த வரையில் பல மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீரும் கிடையாது… கழிவறையை சுத்தம் செய்வதும் கிடையாது…. ஆனால் அது குறித்து ஆசிரியர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்வதும் கிடையாது… இதுதான் உண்மையின் நிலவரம்..
ஆனால் அமைச்சரோ தமிழக கல்வி அமைச்சரோ, அரசு பள்ளிகளை வெளிநாட்டு பள்ளிகள் ரேஞ்சுக்கு தரம் உயர்த்தி இருப்பதாக வாய் சவடால் மட்டுமே பேசி வருகிறார்….