டில்லி

ஜிஎஸ்டிபதிவுக்கான வர்த்தக வரம்பை நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் உயர்த்தி உள்ளன.

கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜிஎஸ்டி கமிட்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி பதிவுக்கான வர்த்தக வரம்பு உயர்த்தப்பட்டது.   இந்த மாற்றம் பெரிய மாநிலங்களுக்கு ரூ20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் சிறிய மாநிலங்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாகவும் உயர்த்தபட்டது.

இந்த மாற்றத்தை அனைத்து மாநிலங்களும் அமுல் படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.    தற்போது கேரளா, தெலுங்கானா மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் இன்னும் பழைய உச்சவரம்பில் இருந்து மாற்றப்படாமல் உள்ளது.   மற்ற மாநிலங்களில் இது அமுல்படுத்தப் பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கமிட்டி ரூ.20 லட்சம் அல்லது ரூ.40 லட்சம் உச்சவரம்பை மாநிலங்களே தேர்வு செய்யலாம் என அறிவித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.   இது குறித்து கேரள அரசு முதலில் ரூ.20 லட்சம் உச்ச வரம்பாக வைக்கப் போவதாக அறிவித்தது.

ஆனால் இதை பரிசீலனை செய்யப்போவதாக தற்போது அறிவித்துள்ளது.  ஆனால் இதுவரை பரிசீலனை முடிவுகள் எதையும் கேரள அரசு அறிவிக்க்கவில்ல.

தெலுங்கானா அரசு இது குறித்து விரைவில் அம்மாநில முதல்வர் முடிவு எடுப்பார் என அறிவித்துள்ளது.    அத்துடன் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை இதை அறிவிக்க கால அவகாசம் உள்ளதால் அதற்குள் முடிவு எடுக்கப்படும் என இம்மாநிலங்கள் தெரிவித்துள்ளன.