சென்னை:

சிம்பு நடித்து வந்த மாநாடு படம்  கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக மகா மாநாடு என்ற பெயரில் 5 மொழிகளில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாய் படம் எடுக்கப்படும் என்று டி.ராஜேந்தர் அறிவித்து உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்க இருந்த படம்,`மாநாடு’. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அரசியல் சார்ந்த கதை எனக் கூறிவந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் நடைபெற இருந்தாக கூறப்பட்ட நிலையில், திடீரென  இப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். மேலும்,  வேறொரு ஹீரோவை வைத்து படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும்’ என்றும் சொல்லியிருந்தார்.

இது தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர்,  தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில்  சிம்பு நடிக்கும் ‘மகா மாநாடு’ படம் எடுக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.

சுமார் 125 கோடி ரூபாய் செலவில் 5 மொழிகளில் மகா மாநாடு படம் தயாரிக்கப்படும் என்றும், இந்த படத்தை சிலம்பரசன் கவனித்துக்கொள்வார் என்றும் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக இந்த படத்தை சிம்புவே இயக்குவார் என தெரிகிறது.