சென்னை: ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். சென்னையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

இரவு நேரத்தில் மேம்பாலங்கள் மூடப்படும். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் செல்வோர்கள் பயணச்சீட்டை காண்பித்து செல்லலாம். தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.