டோக்கியோ

ருமாறிய கொரோனா பரவுவதைத் தடுக்க ஜப்பான் நாட்டில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்து வருகிறது.  இதனால் மகிழ்ச்சி அடைய தொடங்கிய நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.   இந்த புதிய கொரோனா பாதிப்பு முந்தைய கொரோனாவை விட 70% அதிக வீரியத்துடன் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்குப் பரவியதாகக் கூறப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஜெர்மனி, பிரான்ஸ் என 8 ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது.   கடந்த வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய ஒருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   இது ஜப்பானில் கடும் பீதியை எழுப்பி உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டினர் நுழைய ஜப்பான் அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.  வரும் ஜனவரி 31 வரை இந்த தடை அமலில் இருக்கும்.  ஜப்பான் மக்கள் மற்றும் குடியுரிமை பெற்றோர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்று மூன்று நாட்களுக்கு பிறகுதான் நாட்டினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.  அத்துடன் நாடு திரும்பியதும் 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது.