ஈரோடு: வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட சந்தன குளத்தில் உள்ள குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து, அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பணிகளை சிறப்பாக செய்து வந்ததற்காக நற்சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா காலக்கட்டத்தில்,  காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை குறைக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.

மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்கை மற்றும் பள்ளி மாற்று சான்றிதழை வாங்க பணம் ஏதும் கேட்க கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

10 , 12 மட்டுமின்றி 8, 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு  தரப்பட்டு உள்து.

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலேயேதான் அரசு தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. அதை மாணவர்கள் வீட்டிலிருந்து பார்த்து கவனித்து படிக்க வேண்டும் என்ற கூறியவர்,  கல்வி தொலைக்காட்சி டிவியை பார்ப்பதை வைத்து மாணவர்களின் பதிவேடு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.